சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.காலியில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தாலும் அதில் சதம் அடித்ததால் சேவாக் `நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
2வது இடம் வகிக்கும் இலங்கை அணித் தலைவர் சங்கக்கராவுக்கும் அவருக்கும் 14 புள்ளிகள் இடைவெளி உள்ளன.
2வது இன்னிங்சில் 84 ரன்கள் விளாசிய இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் காலி டெஸ்டில் ஜொலிக்காத மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வீழ்ச்சி கண்டுள்ளனர்.
கவுதம் கம்பீர் 6 இடங்கள் சரிந்து 10வது இடத்திற்கும், வி.வி.எஸ்.லட்சுமண் 2 இடங்கள் குறைந்து 15வது இடத்திற்கும், ராகுல் டிராவிட் ஒரு இடம் குறைந்து 18வது இடத்திற்கும், தோனி 14 இடங்கள் சரிந்து 40வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
காலி போட்டியில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அதன் மூலம் 800 விக்கெட் உலக சாதனையை எட்டிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன், டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 3வது இடத்துடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.
அவருக்கு முன்பாக முதல் 2 இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், பாகிஸ்தானின் முகமது ஆசிப் ஆகியோர் உள்ளனர்.
முரளிதரன், பந்து வீச்சாளர் தரவரிசையில் நம்பர் ஒன் இடம் வகித்ததில் சாதனை படைத்தவர் ஆவார். அவர் 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி இருந்தார்.
அதன் பிறகு மொத்தம் 214 டெஸ்ட் போட்டிகளின் போது நம்பர் ஒன் இடத்தில் இருந்து சாதனை படைத்து இருக்கிறார். அதாவது 1,711 நாட்கள் அவர் முதலிடத்தை ஆக்கிரமித்து இருந்தார்.
முரளிதரனுக்கு அடுத்து அதிகபட்சமாக ஆஸ்ட்ரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத், 174 டெஸ்ட்களின் போது முதலிடத்தில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |