பிரபலங்கள் எழுதும் சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சையை கிளப்பும். இதற்கு சச்சினும் விதிவிலக்கல்ல. இவரது ரத்தம் இடம் பெற்ற "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதைக்கு எதிர்ப்பு வலுக்கிறது.இளம் தலைமுறையினரின் "ரோல் மாடலாக' திகழும் இவர், தனது ரத்தத்தின் மூலம் மலிவான விளம்பரம் தேடியிருப்பதாக முன்னணி எழுத்தாளர்கள் உட்பட பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் சேவை பணிக்கு நிதி திரட்டவே இது போன்ற முயற்சியில் சச்சின் ஈடுபட்டுள்ளதால் தவறாக நினைக்க தேவையில்லை என கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் "சாதனை மன்னன்' இந்தியாவின் சச்சின். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்துள்ளார். "கிரிக்கெட் கடவுளாக' வர்ணிக்கப்படும் இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரேகான் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதை வரும் 2011ல் உலககோப்பை போட்டி (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது.
இந்த சுயசரிதையில், சச்சின் பற்றி இதுவரை வெளிவராத அரிய புகைப்படங்கள் இடம் பெற உள்ளன. இதன் கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. அவரது டி.என்.ஏ., பற்றிய தகவல்களும் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டுள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்ச ரூபாய். மொத்தம் 10 சிறப்பு பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது. இப்புத்தகங்கள் மூலம் கிடைக்கும் நிதி, சச்சின் கட்டி வரும் பள்ளிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து சச்சின் கூறுகையில்,""எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளேன். எனது நீண்ட பயணத்தை அரிய புகைப்படங்கள் மூலம் தரமான புத்தகமாக காண்பது இனிமையான அனுபவம். "ஓபஸ்' புத்தகத்தை விட எனது வாழ்க்கையை இன்னும் சிறப்பாக வேறு எதிலும் காண முடியாது,''என்றார்.
இப்படி தனது சுயசரிதையை பற்றி றசச்சின் ஒருபக்கம் புகழ்ந்தாலும், மறுபக்கம் எதிர்ப்பும் காணப்படுகிறது. இவர், தனது ரத்தத்தின் மூலம் மலிவான விளம்பரம் தேடியிருப்பதாக எழுத்தாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "டுவிட்டர்' இணையதளத்திலும் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. தனது ரசிகர்களுக்காக ரத்தம் சிந்தியிருந்தால், சாமான்யனும் வாங்கும் வகையில் விலை குறைவாக இருந்திருக்க வேண்டும். ஆனால், விலை 37 லட்சம் ரூபாயாக உள்ளது. சச்சினின் ரத்தம் இடம் பெறாமல், வெறும் கையெழுத்து மட்டுமே இருக்கும் புத்தகத்தின் விலை 1.50 லட்சம் ரூபாயாக உள்ளது. எனவே, அதிக விலைக்கு சுயசரிதையை விற்று இன்னொரு சாதனை படைப்பதே அவரது இலக்கு என விமர்சிக்கின்றனர்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் உட்பட சிலரது கருத்து வருமாறு:
கபில் தேவ் (முன்னாள் கேப்டன்): மிகச் சிறந்த வீரரான சச்சின், தனது சுயசரிதையில் என்ன எழுதியிருக்கிறார் என்பதை படிக்க ஆர்வமாக இருக்கிறேன். இப்புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை சேவை பணிக்கு வழங்க உள்ளார் என்பதை நினைத்து, பெருமைப்பட வேண்டும். மாறாக விமர்சிப்பது தேவையற்ற செயல்,''என்றார்.
ஷாபா டே(எழுத்தாளர்): தற்போதைய போட்டி நிறைந்த உலகில் எதையும் செய்ய துணிந்து விடுகின்றனர். சுயசரிதையின் விற்பனையை அதிகரிக்க, சச்சின் ரத்தத்தை பயன்படுத்துவது என்ற வித்தியாசமான முறையை பதிப்பாளர்கள் கடைபிடித்துள்ளனர். நானும் ஒரு பதிப்பாளர் என்ற வகையில், ரத்தம் மற்றும் உமிழ்நீரை பயன்படுத்தியிருப்பது மோசமான உணர்வை ஏற்படுத்துகிறது. சேவை பணி என்ற பெயரில் "ரத்த சதியை' அரங்கேற்றியுள்ளனர்.
விவேக் அக்னிஹோத்ரி(பாலிவுட் இயக்குநர்): மாஸ்டர் பேட்ஸ்மேனாக வலம் வரும் சச்சின், தனது சுயசரிதையை பிரபலப்படுத்த வேறு வழிகளை தேர்வு செய்திருக்கலாம். ரத்தத்தை பயன்படுத்திய செயல் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. ரத்தம் கலந்த சுயசரிதைக்கு லட்சக்கணக்கில் விலை என்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இதனை முன்பதிவு செய்திருக்கும் 10 பேரும் முட்டாள்களே.
பிரஹ்லாத் கக்கார்(சச்சின் நண்பர்): இந்திய மக்களின் இதயம் கவர்ந்த வீரர் சச்சின். இவரை போன்ற தலைசிறந்த வீரர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள். தனது சுயசரிதை வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அதற்காக நிறைய சிந்தித்து, ரத்த கையெழுத்துக்கு ஒத்துக் கொண்டுள்ளார். இது பற்றி விமர்சிப்பது தேவையில்லாதது. சுயசரிதை விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை சேவை பணிக்கு தானே வழங்க உள்ளார்.
காம்ப்ளி (முன்னாள் வீரர்): தனது அறக்கட்டளை மூலம் பள்ளி கட்ட திட்டமிட்டுள்ளார் சச்சின். இந்த நல்ல காரியத்துக்காக தான் "ரத்த' சுயசரிதை எழுதியுள்ளார். இதில் வர்த்தக நோக்கம் கிடையாது. விளம்பரம் தேடவும் முயற்சிக்கவில்லை. சச்சின் எப்போதுமே தனிமை விரும்பி. இவரை பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் சுயசரிதையில் நிறைய இடம் பெற்றிருக்கும் என்பதால் ஆர்வம் அதிகரித்துள்ளது. இது வரை தெரியாத பல சம்பவங்களை அறிந்து கொள்ளலாம். எனவே, சச்சின் சுயசரிதை விலைமதிப்பில்லாதது.
அஜித் வடேகர் (முன்னாள் கேப்டன்): நல்ல காரியம் என்பதற்காக தான் ரத்தத்தை வழங்க சச்சின் ஒத்துக் கொண்டுள்ளார். பிரபலங்களின் ஓவியங்கள் சில நேரங்களில் 2 கோடி ரூபாய்க்கு விற்றதாக கேள்விப்பட்டுள்ளோம். இதே போன்று இப்புத்தகம் மூலமும் அதிக நிதி கிடைக்கும் என நம்புகிறேன்.
லால்சந்த் ராஜ்புட் (முன்னாள் வீரர்): சச்சின் சுயசரிதை ஒரு தகவல் களஞ்சியம் போன்றது. அவரது ரத்தம் இடம் பெற்றது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. இவர் என்ன எழுதினாலும், அது படிப்பதற்கு இனிமையாக இருக்கும். இதனை பொதுமக்கள் படிப்பதற்கு ஏதுவாக நூலகங்களில் வைக்க வேண்டும்.
கிர்மானி (முன்னாள் விக்கெட் கீப்பர்): சச்சின் ரத்தம் பயன்படுத்தப்பட்டு இருந்தால், அதனை அவரே உறுதி செய்ய வேண்டும். அது பற்றிய விபரங்களை முழுமையாக அறிவிக்க வேண்டும். அதற்கு பின் தான் கருத்து கூற முடியும். |